Durga Homam And Bhairavar Yagam

இன்றைக்கு வியாதி, பணப் பிரச்னை, வேலை இல்லாமல் இருப்பது, கணவன் - மனைவிக்குள் பிரச்னை, சொத்துப் பிரச்னை, நேர்மையாகக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருப்பது, குடும்பத்துக்குள் தகராறு போன்ற பல பிரச்னைகளுக்குத் திருஷ்டியும் ஒரு மாபெரும் காரணமாக இருந்து வருவது பலருக்கும் தெரியாமலேயே இருக்கிறது.

திருஷ்டியின் பிடியில் அகப்பட்டுக் கொண்ட ஒருவருக்கு எதனால் தான் அவஸ்தைப்படுகிறோம் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் போய் விட்டால், என்னதான் பரிகாரம் செய்தும், நிவர்த்தி கிடைக்காமல் இருப்பது பெரும் சோகமே! இதன் பின், தொட்ட காரியம் எதுவும் துலங்காது. பணத்துக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும். வாழ்க்கை முழுக்க அவஸ்தைகள்தான் அடுத்தடுத்து தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஒருவர் வீடு கட்டி விட்டால், அதைப் பார்த்துப் பலர் பொறாமைப்படுகிறார்கள். ஒருவர் குறுகிய காலத்துக்குள் அதிக சம்பளத்தில் ஒரு வேலையில் அமர்ந்து விட்டால், அதைப் பார்த்து உடன்பிறந்த சொந்தங்கள் உட்பட அக்கம்பக்கமே பொறாமைப்படுகிறது. கணவன் - மனைவி ஜோடியாக - அந்நியோன்னியமாக - சந்தோஷமாக இருந்தால், அதைப் பார்த்தும் பலருக்குப் பொறாமை ஏற்படுகிறது. ஒருவரது வாழ்வில் கூடவே கூடாத குணம் - பொறாமை. இது உறவுகளைப் பிரித்து விடும். நண்பர்களை அந்நியப்படுத்தி விடும்.

திருஷ்டிகளைக் களையும் உப்பு, மிளகாய், எலுமிச்சம்பழம், தேங்காய், கடுகு, கற்பூரம், மஞ்சள், குங்குமம், சுண்ணாம்பு போன்ற பல விதமான பொருட்களில் பூசணிக்காய்க்கு முதலிடம் உண்டு. சகல திருஷ்டிகளையும் போக்கும் குணத்தை பூசணிக்காய்க்கு ஆண்டவன் வழங்கி உள்ளான். அமாவாசை தினங்களில் தெருக்களிலும், வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் பூசணிக்காய் உடைப்பது & பலரது திருஷ்டியைப் போக்குவதற்காகத்தான்.. இத்தகைய பொறாமைதான் கண் திருஷ்டியில் முடிகிறது. பிறரது மோசமான கண் பார்வை உங்கள் மீது விழுந்து விட்டால், அந்த திருஷ்டியை உடன் களைவதுதான் முக்கியம். ஒருவருக்குக் கண் திருஷ்டி என்பது இருக்கவே கூடாது.

திருஷ்டி, திருஷ்டி என்கிறோமே... என்ன அர்த்தம்?

திருஷ்டி என்பது மற்றவர்களின் தீய எண்ணங்களாலும் பொறாமைத்தன்மையாலும் சம்பந்தப்பட்டவருக்கு ஏற்படும் பாதிப்பே ஆகும். ‘த்ருஷ்’ என்றால் பார்த்தல் என்று பொருள். ஒருவரது அசுரத்தனமான வளர்ச்சியைக் கண்டு அவரைச் சுற்றி இருப்பவர்கள் பார்த்துப் பொறாமைப்பட்டால், அது சம்பந்தப்பட்டவரைப் பாதிக்கும். இதனால், தீய விளைவுகளே ஏற்படும்.

திருஷ்டியை விஞ்ஞானபூர்வமாகவும் நிரூபித்துள்ளார்கள். ஒருவரிடம் இருந்து புறப்பட்டு வரும் எண்ண அலைகள் மற்றவரின் சிந்தனைகளில் - இயல்பு முறையில் - அன்றாட நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தினால் அதுவே திருஷ்டி எனப்படும்.

எனவே, பார்ப்பவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும் கவனமும் வேறு எதிலாவது படும்படி ஒரு பொருளை வீட்டிலோ, அலுவலகத்திலோ, தொழிற்சாலையிலோ வைத்து விட்டால், பார்ப்பவர்களின் கவனம் முழுக்க அங்கே செல்லும். இதனால் திருஷ்டியின் பாதிப்பு ஓரளவு குறைய வாய்ப்பு உண்டு.

கோயில்களில் கவனித்திருப்பீர்கள். இறைவனின் திருமேனி வீதியுலா புறப்படுவதற்கு முன் ஸ்வாமிக்கு தேங்காய், பூசணி உடைத்து திருஷ்டி சுற்றிப் போடுவார்கள். ஸ்வாமிக்கே திருஷ்டி கழிக்க வேண்டி இருக்கிறது என்றால், சாமான்யர்களான நாமெல்லாம் எங்கே போவது?

சிலர் வீட்டு ஹாலில் அழகான ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு அதில் வண்ண வண்ணப் பூக்களை வைத்திருப்பார்கள். வருபவர்களின் கவனத்தை மாற்றுவதற்காகத்தான் இந்த ஏற்பாடு. வீட்டு வாசலில் மீசையை முறுக்கியபடியோ, நாக்கை வெளியே தள்ளிக் கொண்டு நிற்கும் கோர உருவத்தையோ, அருவருப்பான உருவங்கள் வரைந்த பெரிய பூசணிக்காயையோ வைப்பதும் இதனால்தான். வீட்டில் ஜனித்திருக்கக் கூடிய குழந்தையின் அழகைப் பார்த்துப் பலரும் கண் வைத்து விடப் போகிறார்கள் என்பதற்காகக் குழந்தையின் கன்னத்தில் பெரிய அளவில் மையால் ஒரு திருஷ்டிப் பொட்டு வைப்பார்கள். திருமண நாளில் மணமக்களுக்கும் இது போல் திருஷ்டி பொட்டு வைக்கும் வழக்கம் நம்மிடையே இருக்கிறது.

மஞ்சள் நிறத்துக்கு திருஷ்டியைப் போக்கக் கூடிய குணம் உண்டு. வீட்டு வாசலில் - அதாவது முகப்பில் - கடந்து செல்லும் பலரது கவனமும் விழும்படி மஞ்சள் வண்ணத்தைப் பூசி விட்டால், அவர்களது கவனம் அதில் மட்டுமே விழும். பண்டைய காலத்துப் பெண்கள், தினமும் மஞ்சள் தேய்த்துக் குளித்ததும், புருவ மத்தியில் தூய மஞ்சளால் ஆன குங்குமத்தை இட்டுக் கொண்டதும் திருஷ்டி தங்கள் மேல் விழுந்து விடக் கூடாது என்கிற காரணத்தால்தான். இன்று மஞ்சள் தேய்த்துக் குளிப்பதும் போய் விட்டது. குங்குமம் வைத்துக் கொள்வதும் போய் விட்டது. சோப்புகளும் ஸ்டிக்கர் பொட்டுகளுமே உலகை ஆள்கின்றன.

இவற்றை மனதில் கொண்டு ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் உலக நலன் கருதி தீமைகள் நீங்கி நன்மைகள் பெற வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 31.10.2018 புதன்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ‘திருஷ்டி துர்கா ஹோமத்துடன் சூலினி துர்கா ஹோமம் மற்றும் சொர்ணாகர்ஷண பைரவர் யாகம் நடத்துகிறார். இதனை தொடர்ந்து மாலை 5.00 மணியளவில் அஷ்ட பைரவர் யாகமும், மஹா அபிஷேகமும் நடைபெறுகிறது.

இந்த ‘திருஷ்டி துர்கா ஹோமத்தில்’ 108 பூசணிக்காய்களை ஹோம குண்டத்தில் சமர்ப்பித்து, பலருக்கும் உள்ள திருஷ்டியைக் களையும் வண்ணம் பிரமாண்ட அளவில் ஹோமம் நடைபெற இருக்கிறது.

இந்த திருஷ்டி துர்கா ஹோமத்துக்காக ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள 12 அடி ஆழமுள்ள பிரமாண்டமான யாக குண்டம் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதில் 108 பூசணிக்காய்கள் தவிர அக்னியில் ஆஹுதியாகச் சமர்ப்பிக்கப்படும் பல திரவியங்களும் 108 என்கிற எண்ணிக்கையில் அமைய இருக்கின்றன என்பது விசேஷம்.

கொப்பரைத் தேங்காய், முறம், எலுமிச்சம்பழம், மிளகாய் வற்றல் பொட்டலம், மஞ்சள் பாக்கெட், குங்குமம் பாக்கெட், பழங்கள், மூலிகைகள், சிகப்பு வஸ்திரம் என எல்லாமே 108 என்கிற எண்ணிக்கையில் அமைய இருக்கின்றன. இதோடு 108 லிட்டர் வேப்ப எண்ணெய், நெய், புஷ்பங்கள், பட்சணங்கள், வாசனாதி திரவியங்கள், மேலும் பல விசேஷ திரவியங்கள், குங்கிலியம், சௌபாக்கியப் பொருட்கள் ஆகியவையும் இந்த ஹோமத்தில் அர்ப்பணிக்கப்பட இருக்கின்றன.

பொதுவாக துர்கா ஹோமம் - பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதக ரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், மாத்ரு - பித்ரு தோஷம் அகலுவதற்கும், கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் செய்யப்படுகிறது.

இந்த துர்கா ஹோமத்தில் சூலினி துர்கா ஹோமமும் இடம்பெறுகிறது. தவிர ராகு-கேது பரிகாரங்கள், சனி சாந்தி போன்றவற்றிற்கு இதே ஹோமத்தில் சங்கல்பம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்க விஷயம்..

ஒன்றே ஒன்று... எல்லாவற்றுக்கும் மேலாக நாம் தூய எண்ணத்துடன் இருந்து முழுமையான கடவுள் பக்தியை இடைவிடாமல் அனுசரித்து வந்தால், திருஷ்டியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். என்றாலும், திருஷ்டி விலக்குவதற்கு உண்டான பரிகாரங்களையும் அவ்வப்போது மேற்கொள்வது அவசியம்.

இப்படிப் பலருக்கும் இருந்து வரும் திருஷ்டிகளைப் போக்கும் விதமாகத்தான் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் ‘திருஷ்டி துர்கா ஹோமத்தை’ ஏற்பாடு செய்திருக்கிறார். பல்லாயிரக்கணக்கான ஹோமங்களை இடையறாமல் செய்து வரும் இந்த பீடத்தில் நடக்கும் ஒவ்வொரு ஹோமத்துக்கும் உரிய பலன் நிச்சயம் உண்டு. வாலாஜாவையே ‘யாக பூமி’யாக மாற்றிய பெருமை “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளுக்கு உண்டு. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images