Nellipodi Thirumanjanam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி சயனி ஏகாதசியை முன்னிட்டு வருகிற11.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் நெல்லிப்பொடி திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட இந்துக் கால கணிப்பு முறையில், 15நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளை குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பௌர்ணமி நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும்.

ஏகாதசி தோன்றிய புராண வரலாறு :

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, 'முரன்' பகவானை கொல்ல துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட ஸ்ரீமன்நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

நெல்லிப்பொடியின் சிறப்பு :

நெல்லிக்காய் பொடி உடல் உஷ்ணத்தை குறைத்து, மூளைக்கு குளிர்ச்சியையும், ஞாபகச் சக்தியையும் அளித்து,உடலுக்கும் குளிர்ச்சியைத் தருபவையாகும். கோடை காலங்களில் நமக்குப் பொதுவாகவே ஏற்படக்கூடிய தாகம்,நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணம் ஆகியவற்றிற்கு நெல்லிக்காய் அருமருந்தாகும். தவிர ஆயுள் விருத்திக்கும் சஞ்சீவி போன்றதாகும். தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும். நீரிழிவை நீக்கும் இயல்பு உண்டு. மேலும் நெல்லியில் உடலுக்கு அவசியமான பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் முதலியவை அதிக அளவில் உள்ளதால் உடலுக்கு வலிமை கிடைக்கின்றது. இரத்த விருத்தியையும் கொடுக்க கூடியவை.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த நெல்லிப்பொடி தீர்த்த திருமஞ்சனத்திலும், மஹா தன்வந்திரி ஹோமத்திலும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தக்வலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images