Nivarthi Homam on Swathi Nakshatra

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வருகிற 22.12.2019 ஞாயிற்றுக்கிழமை ஸ்வாதி நக்ஷத்திரத்தை முன்னிட்டு ஸ்வாதி ஹோமம் என்கிற ருண விமோசன ஹோமம் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற உள்ளது.

ஒருவருக்கு ஏற்படும் கடன்கள் தீரவும் ரோகம் என்கிற நோய்கள் அகலவும் சத்ரு என்கிற எதிரிகள் தொல்லைகள் விலகவும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஹோமம், வழிபாடு மிகவும் பலன் தரும். இதை மனதில் கொண்டு தன்வந்திரி பீடத்தில் சுவாதி நட்சத்திரத்தில் ருண விமோசன ஹோமமும், ஸ்ரீ கூர்ம லட்சுமி நரசிம்மருக்கு விசேஷ திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.

எம்பெருமான் ஸ்ரீ மஹாவிஷ்ணு எடுத்த பல அவதாரங்களில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் அவதார மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவரின் திருநட்சத்திரம் சுவாதியாகும். வேதத்திலும், ஜோதிட சாஸ்திரத்திலும் சுவாதி நட்சத்திரம் மிகவும் உயர்வாகக் கூறப்படுகிறது. கடலில் சிற்பிக்குள் முத்து தோன்றுவதும் இந்த நட்சத்திரத்தில் தான் என்று கூறுவர்.

பெரிய பெரிய மகான்களுடனும், ஆசார்யர்களுடனும் தொடர்புடையது இந்த நட்சத்திரம். "வானில் ஸ்வாதி நட்சத்திரம் முன்னேறுவதைப்போல் நான் செல்வேன்' என்று அனுமன் கூறுவதாக வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

சப்தரிஷி மண்டலத்தின் தென்கிழக்கில் ஓர் அபூர்வ நட்சத்திரத் தொகுதி உள்ளது. அதில் அதிபிரகாசமாகத் தெரியும் சுவாதி இருளை தன் ஒளிக்கரணங்களால் அகற்றிவிடும் தன்மை படைத்தது. அராபியர்கள் இதை "சுவர்க்கத்தின் காவலன்' என வர்ணிக்கின்றனர். இவ்வாறெல்லாம் புகழுக்கும் பெருமைக்கும் உரித்தான சுவாதி நட்சத்திரம் கூடிய தினத்தில் செய்யப்படுவது ஸ்வாதி ஹோமம்.

ஸ்ரீ நரசிம்மசுவாமியை பிரார்த்தித்து செய்யப்படுவது மிகவும் சக்தி வாய்ந்தது ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் என்கிற ஸ்வாதி ஹோமமாகும். இந்த ஹோமத்தின் பலனாக எல்லாவிதமான துன்பங்களும், துயரங்களும், சோதனைகளும் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்வாதி ஹோமம் அருளாலகிரி என்கிற சோளிங்கபுரத்திற்கும் ஹஸ்தகிரி என்கின்ற காஞ்சிபுரத்திற்கும் நடுவில் ஔஷதகிரியாக வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்வாதி நக்ஷத்திரத்தில் அவதரித்த ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 22.12.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறுகிறது.

ஸ்வாதி ஹோமத்தின் சிறப்பும் பலன்களும் :

ருண-ரோக-சத்ரு விமோசன, (கடன்-நோய்-சத்ரு தோஷ நிவர்த்திக்கு) ஸ்வாதி ஹோமம் என்கிற ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஹோமமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. உலக மக்களின் பொருளாதார தடைகள் நீங்கவும், கடன் பிரச்னை அகலவும், வியாபாரம், தொழில்களில் ஏற்படும் பணப்பிரச்னைகள் விலகவும், வாழ்வில் ஏற்படும் அனைத்துவிதமான தடைகள் விலகி ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெறவும், (கடன்-நோய்-சத்ரு தோஷ நிவர்த்திக்கு) நடைபெற உள்ளது. ருணம் என்றால் கடன் என்று பொருள். கடன் என்றால் காசு மட்டும் கடன் என்று நினைக்காதீர்கள். அதாவது நாம் பூமியில் பிறக்கின்றபோதே மூன்று கடனுடன்தான் பிறக்கிறோம்.

ரிஷி கடன் திருமணம் ஆகும் வரை, பிரும்மச்சர்ய விரதத்தை கடை பிடிக்க வேண்டும். அப்போது இவரது கடனை நாம் தீர்த்துவிட்டோம் என்று பொருள். இதை கடை பிடிக்கவில்லை என்றால் இவரது கடன் தீராது. ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்று வலியுறுத்துகிறது.

தேவ கடன் அதாவது பிறந்த அனைத்து மனிதர்களும் தனது வாழ்க்கையில் வாழ்நாளில் ஹோமம், யாகம் வருடா வருடம் செய்யவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அதுவே தேவ கடன் என்பதாகும்.

பித்ரு கடன் தெவசம் திதி, ஸ்ரார்தம் இவைகளை முறையாக சரியாக வருடாவருடம் செய்து வந்தால் பித்ருக்கள் ஆசிகளுடன் நமது பணக்கஷ்டம் தீரும். இல்லை என்றால் நமது பணக்கஷ்டம் தீராது.

இதுபோன்ற கடன்கள் தீரவும் ரோகம் என்கிற நோய்கள் அகலவும் சத்ரு என்கிற எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விலகவும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஹோமம், வழிபாடு மிகவும் பலன் தரும். மேலும் கூர்ம அவதாரத்துடன் உள்ள லக்ஷ்மி நரசிம்மரை தரிசித்து பக்தர்களுக்கு ஏற்படும் கோபங்கள் நீங்கி மஹாலக்ஷ்மியின் அருளுடன் நோயின்றி நலமுடன் வாழ பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான கடன்களும் நீங்கி மகிழ்ச்சி பெறலாம் என்கிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images