Sri Raghavendra Swamy 348th Aradhana Vizha

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 4 அடி உயரத்தில் ம்ருத்திகா பிருந்தாவனத்தில் காமதேனுவுடன் மார்பில் ராமரும், பிருந்தாவனத்தில் லட்சுமி நரசிம்மருடன் வடிவமைக்கப்பட்டு தமிழகம்,ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களில் கரிகோல பவணியாக கொண்டு செல்லப்பட்டு மிகவும் பிரசித்தி பெற்ற ம்ருத்திகா பிருந்தாவனங்களில் வைத்து பூஜிக்கப்பட்டு பக்தர்களால் ஆராதனை செய்யப்பட்டு அங்குள்ள ம்ருத்திகளை கொண்டு வந்து, 51 பிருந்தாவனங்களில் இருந்து கொண்டு வந்த ம்ருத்தி வைத்து தன்வந்திரி மஹா மந்திரத்துடன் மத்துவாச்சாரியர்களைக் கொண்டு விசேஷமான முறையில் தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ராகவேந்திர்ரை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்ரீ குரு ராகவேந்திரரின் 348 ஆவது ஆராதனையை முன்னிட்டு வருகிற 16.08.2019 வெள்ளிக்கிழமை முதல் 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை வரை தினசரி காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை விசேஷ ஆராதனை மஹோத்ஸவ விழா நடைபெற உள்ளது. ராகவேந்திரர் மூலமந்திர ஹோமத்துடன்,நவக்கிரஹ ஹோமங்களும், லட்சுமி பூஜையும் பஞ்சாமிர்த அபிஷேகமும், மற்றும் ஆராதனையுடன் நடைபெற உள்ளது.

குரு ராகவேந்திரர் சுலோகம் :

பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச |

பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||

ஸ்ரீ ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாறு :

வேங்கடநாதர் என்கிற ராகவேந்திரர் திரு திம்மண்ண பட்டர் மற்றும் திருமதி கோபிகாம்பாள் என்ற தம்பதிகளுக்கு அடுத்த மூன்றாவது மகனாக அவதரித்தார். இவர் மிகச்சிறு வயதிலிருந்தே நல்ல அறிவாற்றலுடன் திகழ்ந்தார். அவரது தந்தையின் மறைவிற்கு பிறகு அவர் தன் அண்ணன் திரு குருராய பட்டரிடம் வளர்ந்தார்.

துறவறம் ஏற்ற குரு ராகவேந்திரர் :

வேங்கடநாதரின் குருவான ஸ்ரீ ஸுதீந்திர தீர்த்தார் தனக்கடுத்து மத்வ மடத்திற்க்கு பீடாதிபதியாக ஒரு நல்ல வாரிசை தேடிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தான் பகவான் வேங்கடநாதரே ஸுதீந்திரர்க்கு பின் மடத்த்தின் பீடாதிபதியாக ஏற்றவர் என்று கூறியதாக கனவு கண்டார். ஸுதீந்திரரும் அவர் விருப்பத்தை வேங்கடநாதரிடம் தெரிவித்தார். வேங்கடநாதர் அவர் மனைவியும் இளைய மகனையும் காப்பாற்ற வேண்டி இருந்ததால் அவரால் அப்பொறுப்பை ஏற்க இயலவில்லை. எனவே அவர் குருவின் விருப்பத்தைக் கேட்டு மிகவும் மனமொடிந்துப் போனார். எனினும் கடவுளின் இச்சையினாலும் கலைவாணியின் அருளாலும் பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

வேங்கடநாதர், தஞ்சாவூரில் 1621 ஆம் ஆண்டு பால்குண மாசம், சுக்கில பக்ஷம், துவிதியை அன்று துறவறம் ஏற்று ஸுதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராக பொறுப்பேற்றார்.

அதிசயங்களும் அற்புதங்களும் :

பீடத்தை ஏற்ற பிறகு அவர் பல்வேறு யாத்திரைகளை மேற்கொண்டார். அவர் சென்ற இடமெல்லாம் சித்தாந்தத்தைய் பரப்புதல், மற்ற எதிர் சித்தாந்தங்களை ஆதரிக்கும் அறிஞர்களை விவாதத்தில் வெல்லுதல்,குறிப்புகளை எழுதுதல், மாணவர்களுக்கு சாஸ்திரங்களை போதித்தல் மற்றும் உள்ளூர் அறிஞர்களை ஊக்குவித்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டார். அவர் சென்ற இடமெல்லாம் தன் பக்தர்களின் குறைகளையும் உடல் ஊனங்களையும் குணமடையச் செய்து அருளினார்.

ஸ்ரீ ராகவேந்திரரரின் அற்புத மொழிகள் :

சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.

நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும். சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம்.அவையெல் லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும். அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.

கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக்கூடாது'. கடவுளின் மேலான்மையை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெறும் முட்டாள்தனமே ஆகும். நமக்கு கடவுள் மேல் மற்றுமின்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.

இவ்வாறு உரையாற்றிய பிறகு ராகவேந்திரர் பிரணவ மந்திரத்தை ஜபித்துக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார். ஒரு தருவாயில் அவர் கையில் இருந்த ஜபமாலை நின்றது. அந்த அறிகுறியைப் புரிந்துகொண்ட அவர் சீடர்கள் அவரை சுற்றி பிருந்தாவன சுவர் எழுப்பத் தொடங்கினார்கள். அவ்விடமே இன்று மந்த்ராலயமாக போற்றப்படுகின்றது.

இதில் கலந்து கொள்பவர்களுக்கு குரு மகான் ஆசீர்வாதத்துடன் அனைத்து விதமான பிரச்னைகளும் நீங்கி, சகல சம்பத்துடனும், ஆரோக்யத்துடனும் வாழ வழி கிடைக்கும் என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images